Thanjavur Paramapara

Jan 16, 2023

ஏரகரம் - ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி ஆலயம்

Updated: Jan 17, 2023

அருள்மிகு சங்கரநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி ஆலயம், ஏரகரம்

கும்பகோணம் சுவாமிமலை சாலையில், மூப்பக்கோயிலில் இருந்து கிளை பிரிந்து செல்லும் பாதையில் கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கந்தநாத சுவாமி திருக்கோயில். இவ்வாலயம் சமயக்குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசு சுவாமிகளால் வைப்புத்தலமாக பாடப்பட்டுள்ளது. ஏரகரம் கோவிலைச் சார்ந்த கல்வெட்டுக்கள் மூலமாகவும் தஞ்சை இராசராசேஸ்வரத்தில் உள்ள கல்வெட்டு மூலமாகவும் இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது என்பதும், கி.பி. பத்து, பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் பிரசித்தி பெற்று விளங்கியது எனபதும் தெரிகிறது.

அசுரர்களால் முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டபோது சிவபெருமானை வேண்டினர். அப்போது சிவன் கந்தனை அழைத்து முனிவர்களைக் காத்திடும்படிக் கூறியதோடு ஒரு அஸ்திரத்தையும் வழங்கி அதனை செலுத்தும் இடத்தை அவருடைய அகமாக அமைத்துக்கொள்ளும்படி அருளியுள்ளார். முருகனின் அஸ்திரம் பூமியில் பாய்ந்த இடம் ஏரகம் என்கின்றனர்.

அரக்கர்களை நசிப்பதற்குமுன், முருகப்பெருமான் தன் பெற்றோர்களையும், வினாயகப்பெருமானையும் துதித்திட, கயிலையங்கிரியில் உள்ள கணபதியோடு கூடிய எம்பெருமானும், பெருமாட்டியும் கந்தப் பெருமானால் அமைக்கப் பெற்ற ஏரகரம் வந்து அமர்ந்தார்கள். இதுவே ஏரகரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர நாயகி ஸமேத ஸ்ரீஸ்கந்தநாதஸ்வாமி கோவில். இவர்களை சோடசோபசாரத்துடன் முறையே வழிபாடு செய்வதற்காக இடது பக்கத்தில் ஏற்படுத்தப்பெற்ற தடாகம் ‘சரவணப் பொய்கை’ எனப் பெயர் வழங்கலாயிற்று. தோன்றிய நெல்லி மரமே ஸ்தல விருட்சம்.

ஆதி கந்தநாத ஸ்வாமி ஆலயம் என்று அழைக்கப்படும் இவ்வாலயத்தில் சுப்ரமணியர் பின்புறத்தில் நின்ற திருவுருவமாக ராஜ கோலத்தில் உள்ளார்.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு, கும்பகோணம் சோலையப்பன் தெருவில் சரப ஸாஸ்த்ரிகள் என்ற மிகப் பிரபலமான புல்லாங்குழல் வித்வான் வசித்துவந்தார். கண் பார்வையற்ற இவர் ஏரகரத்தில் சங்கர நாயகி சமேத ஸ்கந்த நாதரைத் துதித்து நிஷ்டையில் இருந்து தெய்வத்தன்மை அடைந்தார்.

மக்களின் சங்காதி தோஷங்களை நிவர்த்தித்து, சர்ப்பக் காவடி, மச்சக்காவடி எடுத்து க்ஷேத்திரத்தின் மகிமையை வெளிப்படுத்தினார். இவர் ஏற்படுத்திய பஜனை மடம், சோலையப்பன் தெருவில், ஒரு தொண்டு நிறுவனம் மூலம் இன்றும் இயங்கி வருகிறது.

இவ்ர் பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நன்னாளில் ஒன்று கூடி குலதெய்வ வழிபாட்டை வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

மகா பெரியவா, "பாத்திரத்துல அடிப்பக்கம் இல்லாம நீ அதுல எவ்வளவு தண்ணி புடிச்சாலும் பாத்திரத்துல ஒரு சொட்டு தண்ணி கூட நிக்கப் போறது இல்ல. அந்த மாதிரிதான் நீ எத்தனை தெய்வத்த கும்பிட்டாலும், குலதெய்வ வழிபாடு இல்லைன்னா, எந்த பலனும் உனக்கு கிடைக்கப் போறது இல்லை. அதுக்கு என்ன காரணம்னு உனக்கு நான் அப்புறமாச் சொல்றேன் முதல்ல நான் சொல்றதச் செய்" என்று சொல்லி பிரசாதம் கொடுத்து அனுப்பினார்- தெய்வத்தின் குரல்

மகா பெரியவா கூறியபடி ஏரகரம் கந்தநாத ஸ்வாமியை குலதெய்வமாகக்கொண்ட பல குடும்பங்கள் இக்கோவிலின் புனரமைப்பு பணியில் மிக்க ஆர்வத்துடன் பங்கெடுத்து, ஆண்டுதோறும் சில தினங்கள் ஒன்றுகூடி குலதெய்வ வழிபாட்டை, மிகச்சிறப்பாக நடத்திவருகின்றனர்.

இப்போது அக்குடும்பங்களின் ஒன்றின் உறுப்பினரான பங்களூருவைச்சேர்ந்த திரு. முரளி என்பவருடன் உரையாடுவோம்

Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam

3440
3