நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹாபாரதம்!
ராமாயண, மஹாபாரதம்
ஹிந்து தர்மத்தின் அற்புதமான இதிஹாஸங்களாக இலங்குபவை ராமாயணமும மஹாபாரதமும். வேதத்தின் சுருக்கமே ராமாயணம் என்றும் ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம் என்றும் தொன்று தொட்டு இந்த நாட்டில் போற்றப்பட்டு வருகிறது.உலகில் முதல் முதல் எழுந்த காவியம் என்பதால் ஆதி காவியம் என ராமாயணம் கருதப்படுகிறது. 644 ஸர்க்கங்களில் 24000 சுலோகங்களில் ஏழு காண்டங்களில் தர்மத்தின் திரு உருவான ராமனின் கதையை சம்ஸ்கிருதத்தில் மஹரிஷி வால்மீகி தருகிறார்.
18 பர்வங்களில் (100 உப பர்வங்களில்) ஒரு லட்சம் சுலோகங்களில் 2314 அத்தியாயங்களில் மஹரிஷி வேத வியாஸரால் மஹா பாரதம் இயற்றப்பட்டுள்ளது.
காலம் காலமாக இந்த இரு இதிஹாஸங்களும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமானோரை பல்லாயிரக்கணக்கில் கட்டுரைகள், நூல்கள் மற்றும் காவியங்களை வெவ்வேறு மொழிகளில் இயற்ற ஊக்குவித்திருப்பதை உலகமே அறியும்.
தைவக்ஞர் சூரிய கவி
ஆனால் பாரதத்தைச் சேர்ந்த மூன்று அதிசயக் கவிஞர்கள் இந்த இரு இதிஹாஸங்களை வைத்து ஒரு அற்புதமான அதிசயமான செயலை சம்ஸ்கிருத மொழியில் சாதித்துள்ளனர்.
தைவக்ஞர் சூரிய கவி என்பவர் பெரும் சம்ஸ்கிருத விற்பன்னர், கவிஞர்! அவர் 36 ஸ்லோகங்கள் அடங்கிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் என்று ஒரு காவியத்தை இயற்றியுள்ளார். இதில் ஸ்லோகத்தை முதலிலிருந்து படித்துக் கொண்டு போனால் ராமாயணக் கதையைக் காணலாம். ஸ்லோகத்தின் பின்னாலிலிருந்து திருப்பிப் படித்துக் கொண்டு போனால் வருவது இன்னொரு ஸ்லோகம். அதில் மஹாபாரதக் கதையைக் காணலாம். விகடகவி, தேருவருதே போன்ற சொற்களில் வரும் எழுத்துக்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்கள் வருவது ஒரு சொல் அலங்காரம். இதை ஆங்கிலத்தில் Palindrome என்கிறோம்.
ஒரு ஸ்லோகம் அல்ல, பல ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு காவியமே இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றால்..! வியக்க வைக்கும் இந்தக் காவியத்திலிருந்து உதாரணத்திற்கு இரு பாடல்களை இங்கு காணலாம்.
கௌசிகே த்ரிதபஸி ஷ்ரவ்ரதி யோத்ததாத் த்விதநயஸ்வமாதுரம் I ரந்துமாஸ்வயன தத்தித்தாதயோ தீவ்ர ரக்ஷஸி பதத்ரிகேஷிகௌ II -ஆறாவது ஸ்லோகம்
இதன் பொருள் : எல்லா உயிரினங்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி பூண்ட தசரத மன்னர், (மனோ வாக்கு காயம் ஆகிய )மூன்று விதத்திலும் தவம் செய்த ரிஷி விஸ்வாமித்திரருக்குத் தன் செல்வங்களான ராமர், லக்ஷ்மணரைத் தந்தார்.
இதே ஸ்லோகத்தை திருப்பிப் போட்டுப் படித்தால் பொருள் மாறி விடும் இப்படி:- புண்ணியச் செயல்களைச் செய்த ஓ, பரீட்சித்து மன்னனே, ராக்ஷஸ குணத்தில் வேறு யாரையும் ஒப்பிடமுடியாத பூதனையையும் பறவையின் உருவில் இருந்த பகனையும் குதிரையின் உருவில் இருந்த கேசினையும் விளையாட்டு லீலையாக எல்லையற்ற ஞானம் உடைய ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உடலிலிருந்து (உயிரை நீக்கி) முக்தி அளித்தார்.
இதே காவியத்திலிருந்து இன்னொரு பாடலைப் பார்ப்போம். க்ஷதாய மா யத்ர ரகோரிதாயுர் அங்கானுகானன்யதயோயனானி I நிநாய யோ வன்யனகானுகாரம் யுதாரிகோரத்ரயமாயதாக்ஷ: II – 34வது ஸ்லோகம்
இதன் பொருள் : சுக்ரீவனும் இதர குரங்குகளும் யுத்தகளத்தில் நுழைந்தவுடன் அழியப் போகும் வாழ்வை உடையவனான ராவணனால் ராமருக்கு எந்தக் காயத்தையும் விளைவிக்க முடியவில்லை.
இதையே பின்னாலிலிருந்து படித்தால் வரும் பொருள் இது: நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணர் மலை போன்ற உருவத்தை ஒத்த (அகாசுரன், கேசின், பூதனா ஆகிய) மூன்று பயங்கரமான அசுரர்களை வதம் செய்தான்.
இது போன்ற விலோம காவியத்தின் ஆதிகர்த்தா சூர்யகவியே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பார்த்தபுரத்தில் (அஹ்மத் நகர்) 1580ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த அற்புதமான கவிஞர். இதற்கு அவரே ஒரு உரையையும் எழுதி இருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு காவியம் செய்வது எவ்வளவு கஷ்டமானது என்பதையும் விளக்கியுள்ளார்.
சிதம்பர கவியின் அற்புத காவியங்கள்
அடுத்து 1600ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த சிதம்பர கவி என்பவர் சப்தார்த்த சிந்தாமணி என்ற நூலை இயற்றியுள்ளார். இதிலும் முதலிலிருந்து படித்தால் ராமாயணமும் பின்னாலிலிருந்து படித்தால் மஹாபாரதக் கதையும் மிளிரும். தஞ்சை சரஸ்வதி மஹாலில் சுவடி வடிவில் உள்ள இந்த அற்புத நூல் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் இதன் பெருமை உலகெங்கும் பரவி விட்டிருக்கிறது.இவர் இன்னும் ஒரு படி மேலே போய் கதா த்ரயம் என்ற காவியத்தையும் இயற்றி இருக்கிறார். இதில் ஸ்லோகத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தால் ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றோடு பாகவதக் கதையையும் படிக்கலாம், ஒரே பாடலில் மூன்று பிரம்மாண்டமான நூல்கள்! அதிசயம், ஆனால் உண்மை! உலகில் இது போல எந்த ஒரு மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையாக இது கருதப்படுகிறது!
கவிஞர் வேங்கடாத்வரி
சிதம்பர கவியை அடுத்து அதிசயமான மூன்றாவது கவிஞராகத் திகழ்பவர் வேங்கடாத்வரி என்பவர். 1650ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் இவர். இவரது ராகவ யாதவீயம் என்பது 30 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அரிய நூல். ஸ்லோகத்தை நேரடியாகப் படித்தால் ராமாயணக் கதையையும் தலைகீழாகப் படித்தால் மஹாபாரத கதையையும் இதில் படிக்க முடிகிறது.இதில் இரு ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.
ராமநாமா சதா கேதபாவே தயாவான் அதாபீனதேஜா: ரிபௌ ஆனதே I காதிமோதாஸஹாதா ஸ்வபாஸா ரஸாமே சுக: ரேணுகாகாத்ரஜே பூருமே II -ஸ்லோகம் 7
அனுலோமமாக அதாவது முதலிலிருந்து கடைசி வரை வரிசைக்கிரம்மாகப் பார்த்தால் இதன் பொருள் : துயரப்படுவோரிடம் எப்போதும் சதா கருணையுடன் திகழும் ராமபிரான், சூரியனைப் போலப் பிரகாசிப்பவரும் சுலபமாக அணுகக்கூடியவரும் முனிவர்களைத் துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழித்தவருமான அவர் ரேணுகாவின் புத்திரரும் பூமி அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டு சுற்றித் திரிந்தவருமான பரசுராமரைப் பார்த்த போது குளிர்ந்த ஒளியுடன் அடக்கமுடன் திகழ்ந்தார்.
இதையே திருப்பிப் போட்டால் வரும் ஸ்லோகம்:
மேருபூஜேத்ரகா காணுரே கோஸுமே சா அரஸா பாஸ்வதா ஹா சதா மோதிகா I தேன வா பாரிஜாதேன பீதா நவா யாதவே அபாத் அஸ்வேதா சமானாமரா II
பிரதிலோமமாக அதாவது கடைசியிலிருந்து முதல் வரை (மேலே உள்ள ஸ்லோகப்படி பார்த்தால்) இதன் பொருள் : மேருவையும் வெல்லும் ரைவர்த்தக மலையில் இருந்தபோது பாரிஜாத மலரை அடைந்த ருக்மிணி பூமியில் உள்ள குறைந்த வாசனையே உள்ள எந்த புஷ்பங்களின் மீதும் ஆசையின்றிப் போனதோடு ஒரு புதிய மேனியை அடைந்தவள் போலத் திகழ்ந்தாள்.
ஆக அனுலோமமாகவும் பிரதிலோமமாகவும் உள்ள இந்த விலோம காவியத்தின் அனைத்துப் பாடல்களையும் வார்த்தை வார்த்தையாக எடுத்து அர்த்தத்தைக் கூறப் போனால் கவிதையின் அழகும் ஆழமும் நன்கு புரிவதோடு பிரமிப்பும் வியப்பும் வரும்.
Picture of Krishna and his brother Balarama.
இன்னும் ஒரு பாடல்: தாம் ஸ: கோரமதோஷ்ரீத: விக்ராம் அஸதர: அதத I வைரம் ஆஸ பலாஹாரா வினாஸா ரவிவம்சகே II – ஸ்லோகம்18
அனுலோமமாக இதன் பொருள்: ராமனின் வலதுகரமாகத் திகழ்ந்த பயமே அறியாத லக்ஷ்மணனால் மூக்கு அறுபட்டவுடன் சூர்ப்பணகை ராமன் மேல் பழி வாங்கத் துடித்தாள். இந்த ஸ்லோகத்தை பிரதிலோமமாக கடைசியிலிருந்து தலைகீழாக எழுதிப் பார்த்தால் வருவது
இந்த ஸ்லோகம்:-
கேசவம் விரஸானாவி: ஆஹ ஆலாபஸமாரவை: I ததரோதஸம் அக்ராவித: அஷ்ரித: அமரக: அஸதாம் II
இதன் பொருள்:-மலைகளின் கொட்டமழிப்பவனும், தேவர்களின் தலைவனும், அசுரர்களை அழிப்பவனுமான இந்திரன் தனது சந்தோஷம், பலம், ஒளி ஆகியவற்றை இழந்தான். வானையும் பூமியையும் படைத்த கிருஷ்ணனிடம் சமாதானப்படுத்தும் சொற்களைப் பேசினான். காவியம் படிப்போம்; பரப்புவோம்!
(சம்ஸ்கிருத) இலக்கணத்திற்குட்பட்டு பொருள் பொதிந்த சொற்களை இப்படி அமைப்பதென்பது இறை அருளினால் மட்டுமே வரும் என சூரிய கவியே மனம் நெகிழ்ந்து சொல்லியுள்ளார். இப்படிப்பட்ட தெய்வீகக் கவிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி இதிஹாஸ மேன்மையையும் சம்ஸ்கிருத அருமையையும் நிலை நாட்டி இருப்பது சனாதன தர்மத்தின் ஏராளமான அதிசயங்களுள் இன்னும் ஒரு அதிசயமே!
ராமகிருஷ்ண விலோம காவ்யத்தை சம்ஸ்கிருதத்தில் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில்
http://sanskritdocuments.org/all_pdf/raamakrshhna.pdf என்ற தொடுப்பிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ராகவ யாதவீயம் காவியத்திற்கு ஆங்கிலத்தில் விரிவான அழகான உரை ஒன்றை எழுதி இருப்பவர் டாக்டர் சரோஜா ராமானுஜம்.இந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்திற்கான ஆங்கில விரிவுரை நூலையும் இணையதளத்தில் காணலாம்.
அருமையான காவியங்களை உலகிற்குத் தரும் இணைய தளங்களுக்கும் உரை எழுதிய சம்ஸ்கிருத விற்பன்னர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்கி இக் காவியங்களின் பெருமையை உலகில் பரப்புவோம்!.ராம கிருஷ்ணரின் அருளுக்குப் பாத்திரராவோம்!!
Courtesy
ச.நாகராஜன் - Tamiland vedas
(Reposting it from Amritha Vahini Google group)