top of page

Sri Periyava blessed and inaugurated the Department of ophthalmology - 19 FEB 2026

Pujyashri Shankaracharya Swamiji blessed and inaugurated the Department of ophthalmology - a CSR initiative of L&T valves, at Sri Sankara Multispeciality hospital at Enathur.



ஏனாத்தூர் ஶ்ரீசங்கரா பல்நோக்கு மருத்துவ மனையில் கண்நோய் மருத்துவப் பிரிவு தொடக்க விழாவில் ஶ்ரீ பெரியவாள் வழங்கிய அருளாசி.


நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க


​அத்வைத சித்தாந்த ஸ்தாபகரான ஸ்ரீஆதிசங்கரர் நமக்கு பல்வேறு உபதேசங்களை அளித்துள்ளார். வேதாந்தத்திலே பல்வேறு உரைகள் எழுதியுள்ளார். அத்துடன் பல்வேறு ஸ்லோகங்களை விநாயகர் முதல் பல்வேறு தெய்வங்கள் மீதும் புனித நதிகள் மீதும் கங்கா, யமுனா, நர்மதா போன்ற புண்ணிய நதிகள் மீதும் ஸ்தோத்திரங்கள் எழுதியுள்ளார். அதனால்தான் நாம் நதியினைத் தெய்வமாக, தேவதையாக நாம் போற்றி . அதனால் தான் மகா மகம், கும்பமேளா புஷ்கரம் என்று விழாக்களை கொண்டாடுகிறோம். அப்படி நதிகளை ஸ்தோத்ரம் செய்கிறோம்.


ப்ரவக்ஷ்யாமி ஸர்வ ப்ரணானம்


பாகீரதீ வாரணாஸீ யமுனா சரஸ்வதி


என்றெல்லாம் பாடுகிறோம், பாரட்டுகிறோம், வழிபடுகிறோம். நீரைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதை தெய்வமாக பாவிக்க வேண்டும். அதனால் தான் கங்காஷ்டகம் யமுனா அஷ்டகம் நர்மதா அஷ்டகம் என்றெல்லாம் எழுதி இருக்கிறார் பஜகோவிந்தம் என்பதாக வாழ்க்கையில் நம்முடைய சிந்தனைகள் சிறப்பாக இருக்க வேண்டும். மற்றவர்கள் வாழ்வினில் வளமாக இருக்க நாம் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி “பஜகோவிந்தம்” “பஜகோவிந்தம்” என்று சொல்லி எளிமை, உண்மை, உழைப்பு, பிறருக்கு உதவுதல் என்பதை பற்றி விளக்கி சொல்லி வாழ்க்கையின் அருமை பெருமைகளை எடுத்து சொல்லி “எது உண்மை”? “எது நிரந்தரம்”? “எது பொய்”? என்பதை எல்லாம் சொல்லி வாழ்க்கையை வீணடிக்க கூடாது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். வாழ்க்கை என்பது பயனுள்ளதாக அமைய வேண்டும். சரியான கல்வி தேவை, சரியான வழிகாட்டுதல் தேவை, சரியான விதத்திலே, சரியான நேரத்திலே, சரியான உதவிகள் தேவை. உதவிகளைப் பெறுவதிலோ உதவிகளை செய்வதிலோ சரியான நேரத்தில் சரியான விதத்தில் அமைய வேண்டும் அதுதான் நியாயத்திற்கு தர்மத்திற்கு எடுத்துக்காட்டு என்று பஜகோவிந்தத்தில் மனிதனின் வாழ்விற்கு உரிய இயல்பு, இலக்கணம், இலக்கு, லட்சியம் என்பதைப் பற்றி ஆதிசங்கரர் பஜகோவிந்தத்திலே எடுத்துச் சொல்லி சிறப்பாக அமைந்துள்ளது. இன்றும் நம் நாட்டிலேயேயும் சரி வெளிநாட்டிலேயும் சிறப்பாக இருந்து வருகிறது. அதேபோன்று ’பிரச்னோத்தர ரத்ன மாலிகா’ என்கிற அவருடைய நூலிலே வாழ்க்கையிலே நம்முடைய சேவை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் என்பதை பற்றி குறிப்பிடப்படும் போது முக்கியமாக மூன்று துறைகளைக் குறிப்பிடுகிறார். ’வித்தியா’ கல்வி துறையை வியாபார நோக்கில் செல்லாமல் வளர்ச்சி நோக்கில் செல்ல, சேவை நோக்கிலே சொல்லி அந்த குருகுலத்தில் என்ன இருக்கின்றனவோ-கல்வி, விஞ்ஞானம், மருத்துவம், கைத்தொழில் என்று எவ்வளவோ இருக்கின்றன. ஏழ்மையைப் போக்குவதற்கான நம்முடைய மனதிலே இருக்கக்கூடிய தீய எண்ணங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இல்லாத எண்ணங்கள் அவைகளை எல்லாம் நாம் நீக்கிக்கொண்டு அமைதி, வளர்ச்சி பாதையிலே நாம் செல்ல வேண்டும்.


​ஆத்ம குணங்களை போதிக்க கூடிய கல்விக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆத்ம குணங்கள் என்றால் அகிம்சை, பொறுமை, பரோபகாரம், எளிமை, நளினம், பிறரை துன்புறுத்தாமல் இருத்தல். இப்படி அமைதியான ஆக்கபூர்வமான சிந்தனைகள் ஆகியவையாம். சுயநலத்தை நாம் வெறுத்தல் இல்லை. சுயநலமும் என்பது பிறருடைய நலனுக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே, முடிந்த விதத்திலே பிறருக்கும் நாம் உதவி செய்ய வேண்டும். என்பதாக தன்னையும் காத்துக் கொண்டு பிறருடைய நலனையும் காப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். என்பதற்காக பரந்த மனப்பான்மை உடைய கல்வி சிறந்த ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை நாம் பரப்ப வேண்டும் என்பதற்காக, நீங்கள் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். “அனைவருக்கும் கல்வி” “அனைவருக்கும் பக்தியுடன் கூடிய கல்வி” “உழைக்கக்கூடிய தன்மையுடன் கூடிய கல்வி” “உதவ வேண்டும் என்கிற கருணை உள்ளத்தை உருவாக்கக்கூடிய கல்வி” இது போன்ற கல்வியை நாம் உருவாக்க வேண்டும். கல்வியின் நோக்கம் என்பது எது சுதந்திரத்திற்கு வழிவகுக்கிறதோ அதுவே கல்வி. சுதந்திரம் என்றால் நல்லவருடைய பெயரை பேச்சை கேட்காமல் இருப்பது என்று அர்த்தம் அல்ல. நான் எந்த கட்டுப்பாட்டுக்கும் கட்டுப்பட மாட்டோம் என்பதல்ல சுதந்திரம். சுதந்திரம் என்பது அவரவர் சொந்த காலிலே நிற்பதற்கான சக்தியை உருவாக்குவது. அதற்கு, சரியான கல்வியை சரியான நேரத்திலே அளித்து பொருளாதாரத்தையும் வலுப்படுத்திட வேண்டும். பிறரை சார்ந்து இருக்காமல் வியாபாரத்திலும் பொது நிர்வாகத்திலும் ஒரு தேசம் ஒரு சமுதாயம் ஒரு தனி மனிதன் பிறரை சார்ந்து இருக்க கூடிய நிலையை தரக் கூடிய விதத்தை “ஆத்மநிர்பர்” என்று சொல்கிறோம். அதாவது, தன்னிறைவு என தமிழிலே நாம் எதைக் குறிப்பிடுகிறோமோ அது ஆத்மநிர்பர். அதுபோன்று கல்வியை அளிப்பதே சிறந்தது என ஆதிசங்கரர் கூறுகிறார். அனைவரின் உடல் நலத்திற்கு நல்ல மருந்தை அளிக்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் அந்தக் காலத்திலேயே ஆதிசங்கரர் நமக்கு அறிவுறுத்தியுள்ளர். “நல்ல மருந்து” என்பது மருத்துவ கல்வி, மருந்துவகைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை உள் அடக்கியதாகும். மருத்துவமனைகளாக இருக்கட்டும் மருத்துவர்களாக இருக்கட்டும், மருத்துவ கல்வியாக இருக்கட்டும் மருத்துவத் துறையை சார்ந்தவர்களாக இருக்கட்டும் மருந்துகளாக இருக்கட்டும் மொத்தத்திலே உடல்நலம் சீராக இருப்பதற்கு நீண்ட ஆயுளுடன் மக்கள் வாழ்வதற்கு நிம்மதியுடன் வாழ்வதற்கு நோய் நொடியின்றி வாழ்வதற்கான உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என்றே, உபதேசம் செய்கிறார், ஸ்ரீ ஆதிசங்கரர். லோகாயதமான வாழ்க்கையினையும், சிறந்த வாழ்க்கை முறையாக அமைவதற்கு, நீண்ட ஆயுள் அமைவதற்கு அவர் நமக்கெல்லாம் உபதேசம் செய்திருக்கிறார். தானம், கொடை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். ஏனென்றால் உலகத்திலே பொருளாதார நிலை என்பது வெவ்வேறு காலத்திலே வேறுபடுகிறது. எனுனும், நல்ல குடிநீர் என்பது மக்களுக்கு, என்றைக்கும் கிடைக்க வேண்டும் நல்ல மருந்து என்பது என்றைக்கும் கிடைக்க வேண்டும் மாசற்ற காற்று என்பது என்றைக்கும் கிடைக்க வேண்டும். பஞ்ச பூதங்களில் ஏற்படக்கூடிய ஏற்ற தாழ்வுகளால் பூமியில் விளைச்சல் குறைவாக இருக்கலாம் ஆனால் அந்த மண் சாரம் அப்படியே இருக்கும், என்று நினைக்கக் கூடாது ஆகவே அந்த பஞ்சபூதங்கள் சிறப்பாக அமைவதற்கு நாம் “கொடை “ என்பதை வலியவர்களுக்கு உரியவர்களுக்கு அளிக்க வேண்டும். கொடை அளிப்பதன் மூலமாக மனிதநேயம் என்பது வலுப்பெறுகிறது மனிதர்கள் மத்தியிலேயே உயிரினங்கள் அனைத்தும் ஒன்று என்ற ஜீவகாருண்யம் சம தரிசனம் என்ற உணர்வு மேலோங்குகிறது. “இல்லாதவர்களுக்கு” “இருப்பவர்கள்” அளிப்பர் அது தானமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம் அல்லது கைத்தடியாகக் கூட இருக்கலாம், கைப்பிடி அரிசியாக இருக்கலாம். பிறருடைய நன்மைக்காக உரியவர்கள் செல்வம் படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், பிறரை நல்ல விதமாக நோக்கும் பார்வை என்பது முக்கியம். அந்தப் பார்வைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஊர் “காஞ்சிபுரம்”, காஞ்சி காமாட்சியும் சரி, மதுரை மீனாட்சியும் சரி, அந்தப் பார்வையினுடைய மகிமை, பார்வையினுடைய பலனுக்கான பிரதேசம் தான் காஞ்சிபுரம். நம் அனைவரிடமும் ‘பார்வை’ என்பது நல்ல உள்ளத்துடன் இருக்க வேண்டும். ஆகவே, எந்த நோக்கத்தோடு எந்த விதத்தில் நாம் பார்த்துக் கொள்கிறோம் என்பது பல்வேறு மொழிகள், பல்வேறு சம்பிரதாயங்கள் இருக்கக்கூடிய இந்த நாட்டிலேயே, கல்வியாக இருக்கட்டும் வியாபாரமாக இருக்கட்டும் தொழில்துறையாக இருக்கட்டும் அனைத்தும் சிறப்பைப் பெற்று ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்து தர்ம காரியங்களை செய்ய வேண்டும். அதற்கு உரிய விதத்திலே காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியிலே காஞ்சிபுரத்தினுடைய வளர்ச்சியில் காஞ்சி சங்கர மடமும் பங்கெடுத்துக் கொண்டு, எங்கள் காஞ்சி ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூலமாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கல்வி அளித்து வருகிறது. இங்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மகாவித்தியாலயா பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கும் பிற மாநிலத்தை சார்ந்தவர்களுக்கும் தொழிற்கல்வி, ஆயுர்வேதம், வேளாண்மை, சமஸ்கிருதம், தமிழ் இன்னும் பல மொழிகளுக்கெல்லாம் துறைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலையுடன் கூடிய தொழிற்கல்வி உங்க லேபிலயே(Lab) படிப்பது மட்டுமல்லாமல் தொழிற்சாலைக்கும் சென்று நேர்முகமான பயிற்சி உட்பட பல தொழில் நிறுவனங்கள் தற்பொழுது முன்வந்துள்ளன. அந்தக் கூட்டு முயற்சியின் காரணமாக, ஆராய்ச்சி, வர்த்தகம் என்றெல்லாம் சிறந்த தொழிற்கல்வியை அளிப்பதற்காக சங்கரா கல்லூரியும், நிகர்நிலை பல்கலைக்கழகமும் முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றன. இங்கு நர்சிங் கல்லூரி சில வருடங்களுக்கு முன்னாலே தொடங்கப்பட்டது. இந்த இடம் ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகளால் பொதுநல நன்மைக்காக கட்டப்பட்ட கட்டிடம். அவர்களால் இதே போன்று பல இடங்களில் மருத்துவமனைகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்து மிஷன் மருத்துவ மனைகள், சங்கரா கண் மருத்துவமனை என பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றன. பம்மல் விஸ்வநாதன் அவர்கள் மூலமாக நடைபெற்று வருகின்றன. தற்போது புதிதாக நேபாள எல்லையிலே மருத்துவமனை துவங்க ஆயத்தமாகி வருகிறது. இதன் மூலம் பீகார் மற்றும் நேபாள மக்கள் பயன்பெறுவர். பல மாநிலங்களில் மருத்துவ சேவைகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரத்திலும் ஸ்ரீசங்கரா மருத்துவமனை மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக குறிப்பாக சங்கர மடத்தில் இருப்பவர்களுக்கும், ஏனாத்தூர் வாசிகளுக்கும் பயனளித்து வழுகின்றன. இன்னும் பல முன்னேற்றம், வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் இன்று L&T கம்பெனி மூலமாக கண் மருத்துவ பிரிவு துவங்கப்பெற்றுள்ளது. இதன் மூலமாக பல உதவிகள் செய்யப்பெற்று வருகின்றன. இரத்ததான முகாமும் துவங்கப்பெற்றுள்ளது. சங்கரா கல்லூரி, நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கான மாணவ மாணவியரின் விடுதிக்கான நிதி உதவி வசதி L&T வழியாகச் செய்யப்பெற்றுள்ளது.

கிராமப்புற மக்களுக்குத் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டது இம்மருத்துவமனையாகும். ஸ்ரீபெரிவர்களின், இந்நோக்கம் முழுவதுமாக நிறைவேறிட காஞ்சிபுரத்திற்குச் சற்றுத் தொலைவில் உள்ள கிராம மக்களுக்கும் இந்த மருத்துவ சேவை எளிதாய் கிடைத்திட காஞ்சி மாநகரப் பேருந்து வசதி இன்னும் அதிகமாக விரிவு மற்றும் வலுப்பட வேண்டும், என்ற கோரிக்கை பொதுமக்களிடம் இருப்பதாக நாம் அறிகிறோம். அவ்வாறாயின் இந்த வேண்டுகோளை தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகள் விரைவுபடுத்தி பூர்த்தி செய்வார்கள் என்றும் நம்புகிறோம். மேலும் இம்ம மருத்துவமனைக்கு அருகிலேயே ஏனாத்தூரில் தேவையான நிலங்கள் நன்கொடை அளிக்க கொடையாளிகள் முன் வருவார்களாயின் இம்மருத்துவமனை மேலும் விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்கள் சேவையை சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இணையாகவும் துணையாகவும் உயர்த்த வாய்ப்புகள் உண்டு.


​ஏனாத்தூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினைக் கொடுக்க வேண்டும் என்று இந்த தொழிற்சாலையும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூலமாக தொடங்கப்பட்டு அது நூற்றுக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுத்து வருகிறது. தொடர்ந்து இந்த தர்மங்கள் சிறப்பாக நடைபெற்று, கல்வியில் கரையிலாத காஞ்சிபுரத்தில் கல்வியும், சிறந்த மருத்துவ வசதியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். முனிசிபாலிட்டியாக இருந்த காஞ்சிபுரமானது மாநகராட்சியாக ஆக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உரிய வசதிகளும் சென்னைக்கு இணையாக காஞ்சியிலும் கிடைக்க வேண்டும். இந்த மருத்துவமனை சிறந்த வசதிகளுடன் மேன்மேலும் பல்துறை வசதிகளுடன் செயல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தைச் சுற்றி உள்ள ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா, உத்திரமேரூர், சுங்குவார்சத்திரம் போன்ற ஊர் மக்களுக்கும் சிறந்த தரத்துடன் கூடிய மருத்துவமனையாக அமைவதற்கு தொழில் நிறுவனங்களும் ஒத்துழைப்பு நல்கி இந்த சங்கரா மருத்துவமனை மேலும் மேலும் சிறப்பு பெற்று மக்களுக்கு நல்ல முறையிலே சேவை செய்து வரவேண்டும். லட்சுமி கடாட்சத்தை குறிக்கும் வகையில் அருகே இங்கு மூன்று யானைகள் உள்ளன. நாள் தோறும் கஜபூஜை நடைபெறுகிறது. அனைவரும் அனைத்து நலன்களும் பெற ஸ்ரீ அன்னை காமாட்சியின் அருளை வேண்டிக் கொள்கிறோம்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர


இந்த நிகழ்வு குறித்து தினசரி செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



 
 
 

Comments


bottom of page