top of page

Thirukottaru temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

*கோவை.கு.கருப்பசாமி.*

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*சிவ தல தொடர்.71.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்,தொடர்.*

(நேரில் சென்று தரிசித்ததைப் போல.....)

*திருக்கோட்டாறு.*

சிவஸ்தலப் பெயர் *திருகோட்டாறு* (தற்போது திருக்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது).

*இறைவன்:* ஐராவதேஸ்வரர்.

*இறைவி:* வண்டார் பூங்குழலி அம்மை, சுகந்த குந்தளாமிபிகை.

*தல விருட்சம்:* பாரிஜாத மரம்.

*தல தீர்த்தம்:* சூரிய தீர்த்தம், வாஞ்சியாறு தீர்த்தம்.

*பழமை:* 1400 ஆண்டுகளுக்கு மேல்.

*விசேஷ மூர்த்தி:*

குமார புவனேஸ்வரர்.

*இடச்சூழல்:*

வயலும், வயல்சூழ்ந்த மருதநிலமாய், பச்சைப்பசேலெரென அமைதி குடிகொண்ட சிற்றூரைக் கொண்டமிது.

காவிரித் தென்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற 128 தலங்களுள், இத்தலம் ஐம்பத்து மூன்றாவதாகப் போற்றப்படுகிறது.

*இருப்பிடம்:*

காரைக்காலில் இருந்து பன்னிரண்டு கி.மி. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறது.

காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் சென்று, நெடுங்காடு தாண்டியபிறகு திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவு வரும்.

அங்கிருந்து சுமார் இரண்டு கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.

கும்பகோணம் - காரைக்கால் பிரதான சாலையில் கொல்லுமாங்குடி, பேரளம் தாண்டியவுடன் அம்பகரத்தூர் என்ற ஊர் வரும். அவ்வூரிலுள்ள காளி கோவிலில் இருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் இத்தலத்தின் ஐராவதேஸ்வரர் ஆலயம் உள்ளது.

கும்பகோணத்தில் இருந்து வருபவர்கள் இவ்வழியே வந்து ஆலயத்தை அடையலாம்.

*தல அருமை:* தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் ஒரு முறை துர்வாசரை அவமரியாதை செய்தது.

ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறைவனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானை மீது அமர்ந்து பவனி வரும் இந்திரன் கையில் கொடுத்தார்.

செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் தேய்த்தது.

துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். துர்வாச முனிவரின் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுகள் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடல் புராண வரலாறு.

அவ்வாறு வெள்ளை யானை (ஐராவதம்) சென்று வழிபட்ட பல தலங்களுள் திருகோட்டாறு தலமும் ஒன்று என்பர்.

வெள்ளை யானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் பெய்யச் செய்து வழிபட்டதால் இத்தலம் கோட்டாறு எனப் பெயர் பெற்றதென்பர்.

*கோவில் அமைப்பு:*

முதலில் நாம் உள் நுழையவும், மூன்று நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் நம் பார்வைக்கு தெரியவும் *சிவ சிவ,சிவ சிவ..* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.

உள்ளே சென்றது வலமாக வரும்போது விநாயகர் இருக்கிறார். விடுவோமா? வழக்கமான முதல் வணக்கத்தை அவருக்குச் செலுத்தி அவரன்பைப் பெற்றுக் கொண்டோம்.

விசாலமான வெளிச் சுற்றில் வலம் வந்து கோஷ்ட மூர்த்தங்களாக அருள்பாலித்த தட்சிணாமூர்த்தியையும், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் தறிசித்துக் கொண்டோம்.

பிராகாரத்தில் சுந்தரர், பரவையார், சுபமகரிஷி மூலத்திருமேனிகளும் அயுள்பாலித்த வண்ணமிருந்தனர். அவர்களையும் தொடர்ந்து வணங்கிக் கொண்டோம்.

உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுப முனிவர், முருகன், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன்,

முதலியோர் சந்நிதியில் இருந்து அருள்கோலோட்ச நாமும் வணங்கிப் பணிந்து நகர்ந்தோம்.

அடுத்ததாக நமக்கிருக்கும் ஆவலான நம் ஆடவல்லானின் ஆடற் அங்க அசைவுக் கோலங்களை மும்,அவனருட் பிரசாதங்களையும் பெற்று நகர்ந்தோம்.

சுபமகரிஷியின் சிலையும், குமார புவனேஸ்வரரின் உருவச்சிலையும் வெளிச்சுற்றில் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவரையும் கண்டு வணங்கி ஆனந்தித்தோம்.

அடுத்ததாக நாம் உள் நுழைந்த இடம் மூலவரைக் காண.

இவர் மிகச் சிறிய உருவில் கிழக்கு நோக்கி அருள் பார்வைகளை வீசி எழுந்தருளியிருந்தார். இவரைக் கண்டு மெய்மறந்து நின்றோம். மனமுருகி பிரார்த்தித்தோம்.

விபூதிப் பிரசாதம் பெற்று நகரும் போது கருவறையின் உள் நம் கண்கள் பதிய, அங்கே மூலவர் கருவறையில் தேனீக்கள் தேன்கூடு கட்டி உள்ளதைக் கண்டோம்.

அங்கிருந்த அர்ச்சகரிடம் தேன்கூட்டைப் பற்றி விசாரித்தோம்.

அவர் சொன்னார்......

இந்த்கூடு பல்லாண்டு காலமாக இருந்தே வருகின்றது என்று சொன்னார்.

இத்தேன் கூட்டைப் பற்றிச் சொல்லப்படும் செவி வழிச் செய்தி ஒன்றும் நம் செவிக்குக் கிடைத்தது.

"சுபமகரிஷி என்பவர் தினந்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு மூடப்பட்டு விட்டது. அதைக் கண்ட சுபமகரிஷி தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டாராம்.

அதுமுதல் அங்கேயே தங்கி விட்டார். அக்காலம் முதல் தொடங்கி மூலவர் சந்நிதியில் தேன்கூடு இருந்து வருகிறது என்று சொல்கிறார்கள்.

நீங்களும் தரிசிக்கச் செல்லும்போது அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வாருங்கள்.

ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் அபிஷேகம் செய்கிறார்கள். அதன் பின் மீண்டும் தேனீ கூட கட்டி தேன் சேர்க்கப்படத் துவங்கி விடுகிறது.

இந்த சுபமகரிஷியின் உருவம் வெளிச் சுற்றில் பின்புறத்தில் இருக்கிறது. அவரையும் பாருங்கள். பாராமல் விட்டு விடாதீர்கள்.

பெருமா, கைமா, மருள்மா, மயமா, வயமா, மந்தமா, கோட்டுமா ஆகியவையெல்லாம் யானையைக் குறிக்கும் பெயர்களே. யானையின் தந்தம் எயிறு, கோடு, மருப்பு என்னும் பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. எனவே கோட்டுமா (யானை) கொண்டுவந்த ஆறு கோட்டாறு எனவும், யானைக் கோட்டின் (தந்தத்தின்) காரணமாக வந்த ஆறு என்பதால் கோட்டாறு என்றும் ஆனது.

மேலும் கொட்டாரம் என்றால் யானை கட்டுமிடம் என்றும், கொட்டாகரம் என்றால் நீர்நிலை என்றும் பொருள் கூறப்படுகிறது.

யானைக்கும் நீருக்கும் இவ்வூர் தொடர்புடையதாய் இருப்பதால் திருக்கொட்டாரம் எனப்பட்டது.

ஒருசமயம் இந்திரன் தனது வாகனமான வெண்ணிற ஐராவத யானைமீது பவனி வந்துகொண்டிருந்தான்.

அப்போது அங்குவந்த துர்வாச முனிவர், சிவலிங்க பூஜை முடித்து இறைவனுக்கு சாற்றிய தாமரை மலரை இந்திரனிடம் கொடுத்தார். செருக்குடன் வந்த இந்திரன் பிரசாதத்தின் பெருமை அறியாமல் ஒரு கையால் பெற்று அதனைத் தன் யானைமீது வைத்தான். யானையானது அம்மலரை தன் துதிக்கையால் எடுத்துக் கீழேபோட்டு காலால் மிதித்தது. இதைக்கண்டு ஆத்திரமுற்ற துர்வாச முனிவர் தேவேந்திரனையும் ஐராவதத்தையும் சபித்தார். அதன்படி ஐராவதம் பூலோகத்தில் காட்டு யானையாகி கருமைநிறம் பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தலங்களில் பரமேஸ்வரனை வழிபட்டு, இறுதியாக மதுரையம்பதியில் இறைவன் அருளால் இழந்த பெருமை யையும், வடிவத்தையும், வெண்ணிறத் தையும் பெற்று இந்திரலோகம் சென்றதாக திருவிளையாடற் புராணம் எடுத்துரைக் கின்றது.

அவ்வாறு ஐராவதம் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று.

அதுதினமும் நதியில் நீராடி, துதிக்கையால் நீரும் மலர்களும் கொண்டுவந்து ஈசனை வழிபட்டுவந்தது.

ஒருசமயம் நீண்டநாள் மழையின்றி நீர்நிலைகள் முழுவதும் வற்றிவிட்டன. சிவபூஜை செய்வதற்கு நீரும் மலரும் இல்லாது போயின. எக்காரணத்தினாலும் சிவபூஜை தடைப் படலாகாது என்று எண்ணிய ஐராவதம், தன் இயற்கையான வலிமையோடு வான்நோக்கி எம்பி குதித்து, தன் தந்தங்களால் அங்கிருந்த கார்மேகத்தைக் கிழித்தது. உடனே பெருமழை பொழிந்தது. இத்திருத் தலத்தில் புதிய ஆறு தோன்றியது. அந்த ஆற்று நீரைக் கொண்டும், வானுலகிலிருந்து தன் துதிக்கையால் பறித்த பாரிஜாத மலரைக்கொண்டும் ஐராவதம் சிவபூஜையை சிறப்பாகச் செய்தது. இதை சம்பந்தர் பெருமான்-

*"நின்று மேய்ந்து நினைந்து மாகரி*

*நீரோடும் மலர்வேண்டி வான்மழை*

*குன்றின் ஏர்ந்து குத்திய் பணி செய்யுங் கோட்டாற்றுள்'*

என்று சிறப்பாகக் குறிப்பிடுகின்றார்.

ஐராவதம் பூசித்த ஈசன் என்பதால் இவ்வூர் எம்பெருமான் ஐராவதீஸ் வரர் எனும் பெயர் பெற்றார்.

*சிறப்பம்சங்கள்:*

மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது எனும் வாக்கிற்கேற்ப, கருவறையில் சிறிய லிங்கமாய் சுயம்புநாதனாய், *"வெள்ளானை விடங்கத்தேவர்'* என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடும் ஐராவதீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சியளிப்பது சிறப்பு.

திருஞானசம்பந்தர் தம் பதிகத்தில் *"தோகை மயில் போன்ற பார்வதிதேவி' எனவும், "அழகிய நீண்ட கூந்தலையுடைய உமையம்மை'*எனவும் பாடிப்போற்றும் அன்னை *"வண்டமர் பூங்குழலி'*யை வேண்டுவோர்க்கு வேண்டியதை நல்கும் வள்ளலாக விளங்குகிறாள்.

"சோழ மண்டலத்து மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையான் மதுராந்தகனான குலோத்துங்க சோழராசன்' (கி.பி. 1253) இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விவரம் கல்வெட்டில் உள்ளது.

14-ஆம் நூற்றாண்டின் கல் வெட்டின்படி *"திருக்கோட்டாறான பழையகுடி' எனக் குறிப்பிடுவதிலிருந்து, *"பழையகுடி'*என்ற பெயரும் முற்காலத்தில் இவ்வூருக்கு இருந்துள்ளது.

இவ்வூர் *"ராசராசப் பாண்டி நாட்டு உத்தமசோழ வளநாட்டு நாஞ்சில் நாட்டுக் கோட்டானான் மும்முடிச் சோழநல்லூர்'* என்றும் கல்வெட்டில் குறிக்கப் பட்டுள்ளது.

திருக்கோட்டாற்று தட்சிணா மூர்த்தியை திருஞானசம்பந்தர் *"கோலமலர் பொழில் சூழ்ந்து, எழிலார் திருக்கோட்டாற்றுள், ஆலநிழற்கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே'*என்று பாடி மகிழ்கிறார்.

திருமணவரம் வேண்டியும், குழந்தைவரம் வேண்டியும், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் தமிழ் மாதப்பிறப்பு அல்லது ஜென்ம நட்சத்திரம் வருகிறநாளில் பிரார்த்தனை செய்தால் எண்ணியது ஈடேறும்.

பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மையப்பனுக்கு அபிஷேகம் செய்தும், புதுவஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இத்தலத்திற்கு இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஐராவதம் ஈசனை வழிபட நீரெடுத்த சூரியதீர்த்தம் எனும் திருக்குளம் கோவிலுக்கு எதிரிலுள்ளது. ஐராவதம் வானிலிருந்து பொழியவைத்த மழைநீரால் உருவான கோட்டாறு என்ற நதியே மற்றொரு தீர்த்தம். தற்போது வாஞ்சியாறு என அழைக்கப்படுகிறது.

கோஷ்டத்திலும் திருமாளிகைப்பத்தியிலும் இருக்கும் அனைத்து திருவுருவச் சிற்பங்களும் மிக நேர்த்தியாய்- அழகாய் வடிவமைக்கப்பட் டுள்ளன.

கிழக்குப் பிராகாரத்தில் முன்மண்டபத்தை ஒட்டி தெற்குநோக்கிய ஒரு தனிச் சந்நிதி உள்ளது. அதில் மேற்கு நோக்கி குமாரபுவனேஸ்வரர் என்னும் திருப்பெயருடன் சிவபெருமான் விளங்குகிறார்.

இத்தல இறைவனடி தொழுபவர்க்கு வருத்தம் வராது; வீண்பழி வராது; துன்பம் வராது; அல்லலும் தடுமாற்றமும் இடரும் அண்டாது; பாவங்கள் அனைத்தும் நீங்கும்; புகழும் புண்ணியமும் அடைவர்; சிறப்புற்று விளங்குவர்; நற்பேறு அடைவர்.

*"ஆலமர் குருவாய் அமர்ந்த அழகன்'* என்று திருஞானசம்பந்தரே இத் தலத்து தட்சிணாமூர்த்தியைக் கண்டு பாடியுள்ளதால், குருவருளைப் பெறுவதற்கு தேடிவரவேண்டிய திருத்தலம்- அர்த்தமற்ற வாழ்க் கையை அர்த்தமுள்ளதாக்கி, கோள்நிலைக் கோளாறுகள் அகற்றி, குறிக்கோளுடன் வாழ வழிவகை செய்யும் தலமான திருக்கொட்டாரத்து ஈசனை வழிபடுவோம்.

*தேவாரம் பாடியவர்கள்:*

*திருஞானசம்பந்தர் பதிகம்.*

வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங்

கும்மறை

ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி

யார்கிளி

கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக்

கோட்டாற்றுள்

ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்ல

லில்லையே.

🏾வேதங்களை அருளிச் செய்த சிவபெருமான் விண்ணோர்களாலும் தொழப்படுகின்றான். அவ்வேதங்களால் போற்றப்படும் உயர்ந்த பொருளாகவும் விளங்குகின்றான். அழகிய கிளிகள் கொஞ்சும் குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிப் பிரானான அவனை நினைந்து வணங்க வல்லவர்கட்குத் துன்பம் இல்லை.

ஏலம லர்க்குழன் மங்கைநல் லாள்இம

வான்மகள்

பாலம ருந்திரு மேனியெங் கள்பர

மேட்டியும்

கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக்

கோட்டாற்றுள்

ஆலநீழற்கீ ழிருந்தறஞ் சொன்ன

அழகனே.

🏾மணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாளான, இமவான் மகளான உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்த எங்கள் பரம்பொருளான சிவபெருமான், வண்ணப் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் ஆலமரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அழகனாவான்.

இலைமல்கு சூலமொன் றேந்தினா னுமிமை

யோர்தொழ

மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி

கண்டனும்

குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக்

கோட்டாற்றுள்

அலைமல்கு வார்சடை யேற்றுகந் தவழ

கனன்றே.

🏾சிவபெருமான் இலைபோன்ற சூலப்படையைக் கையில் ஏந்தியவன். விண்ணோர்களும் தொழுது வணங்க மலை மகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன். கங்கையை நீண்ட சடையிலே தாங்கிய அழகனான அவன், காய்களும், கனிகளும் குலைகளாகத் தொங்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை

பங்கனும்

வானம ரும்மதி சென்னிவைத் தமறை

யோதியும்

தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்

கோட்டாற்றுள்

தானம ரும்விடை யானும்எங் கள்தலை

வனன்றே.

🏾இறைவன் உடம்பினை இயக்கும் உயிர்க்குள் உயிராய் விளங்குபவன். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். வானில் தவழும் சந்திரனைத் தலையிலே அணிந்தவன். வேதங்களை அருளிச் செய்தவன். இடபத்தை வாகனமாக உடையவன். அவன் தேனுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன் ஆவான்.

வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ்

மைந்தனும்

செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி

செல்வனும்

கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக்

கோட்டாற்றுள்

நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள்

நாதனே.

🏾சிவபெருமான் நறுமணம் கமழும் மாலை யணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழும் வலிமையுடையவன். செம்பவளம் போன்ற திருமேனியில் வெண்ணிறத் திருநீறு அணிந்துள்ள செல்வன். அனைத்துயிர்களும் விரும்பி அடையத்தக்க அவன், கொம்புகளிலுள்ள மலர்களை வண்டுகள் கெண்டுகின்ற திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, தன்னைப் பணிந்து வணங்குபவர்கட்கு அருள்புரிபவன். அவனே எங்கள் தலைவன்.

பந்தம ரும்விரன் மங்கைநல் லாளொரு

பாகமா

வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர்

தன்மிகும்

கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்

கோட்டாற்றுள்

அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை

அல்லலே.

🏾சிவபெருமான் பந்துபோன்ற திரட்சியான விரல்களையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். வெந்து தணிந்த திருநீற்றினைப் பூசியுள்ள விகிர்தன். மிகுதியாகக் கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத் தலத்தில் வீற்றிருந்தருள்கின்ற, அனைத்துயிர்களிடத்தும் செவ்விய அருளுடைய அவனை நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அல்லல் சிறிதும் இல்லை.

துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும் வண்டம ருங்குழன் மங்கைநல் லாளொரு பங்கனும் தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள் அண்டமு மெண்டிசை யாகிநின் றவழ கனன்றே.

🏾துண்டித்த பிறை போன்ற சந்திரனைச் சடையில் சூடியவன் சிவபெருமான். நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவன். பூவிலுள்ள தேனை விரும்பி வண்டுகள் அமர்கின்ற கூந்தலையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டவன். கடலும், நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த நிலவளமுமுடைய அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அண்டங்களும், எட்டுத்திசைகளுமாகி நின்ற அழகன் அல்லனோ?

இரவம ருந்நிறம் பெற்றுடை யவிலங்

கைக்கிறை

கரவம ரக்கயி லையெடுத் தான்வலி

செற்றவன்

குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்

கோட்டாற்றுள்

அரவம ருஞ்சடை யானடி யார்க்கருள்

செய்யுமே.

🏾இரவு போன்ற கருமைநிறமுடைய இலங்கை மன்னனான இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க, அவன் வலிமையை அழித்த சிவபெருமான், குரா மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, சடைமுடியில் பாம்பணிந்து விளங்கி, தன் அடியவர்கட்கு அருள்புரிகின்றான்.

ஓங்கிய நாரண னான்முக னும்உண

ராவகை

நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்னிழற்

கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக்

கோட்டாற்றுள்

ஆங்கம ரும்பெரு மானம ரர்க்கம ரனன்றே.

🏾செருக்குடைய திருமாலும், பிரமனும் உணரா வண்ணம் அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். நிழல்தரும் கோங்குமலர்ச் சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான். தேவர்கட்கெல்லாம் தேவனாவான்.

கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில்

லாததோர்

தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத்

தன்னருள்

கொடுக்கலில் லாக்குழ கன்அம ருந்திருக்

கோட்டாற்றுள்

இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை

யாவரே.

🏾சாயம் பற்றும் பொருட்டுக் கடுக்காய் நீரில் தோய்த்த காவி ஆடை அணிந்த புத்தர்களுக்கும், சிறுபாயைச் சுமந்து திரியும் சமணர்களுக்கும் தன்னை நாடாததால், அருள் புரியமாட்டாத அழகன் சிவபெருமான். திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அவனைச் சிரமப்படாமல் எளிய முயற்சியால் வழிபடுகின்றவர்களும், தேவர்கட்குத் தலைவராவர்.

கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக்

கோட்டாற்றுள்

அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு

ளாளனைக்

கடிகம ழும்பொழிற் காழியுண் ஞானசம்

பந்தன்சொல்

படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை

பாவமே.

🏾இடபத்தைக் கொடியாகவும், வாகனமாகவும் கொண்டு திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்க, திருநடனம் புரியும் அருளாளன். அப்பெருமானை நறுமணம் கமழும் சோலைகளையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் போற்றிப் பாடியாட வல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும்.

*திருவிழாக்கள்:*

பிரதோஷம்,

ஆருத்ரா தரிசனம்,

வைகாசி விசாகம்,

சூரசம்ஹாரம்,

தைப்பூசம்,

கார்த்திகைப் பெருவிழா,

பங்குனி உத்திரம். முதலியன.

*தொடர்புக்கு:*

மெய்க்காவலர் ராதாகிருஷ்ணன். 86751 54852

*ஆலயத் தொடர்புக்கு.*

பிரகாஷ்(எ) எஸ்.பாலசுப்பிரமணிய குருக்கள்.98424 87512

75022 12319

திருச்சிற்றம்பலம்.

Reposting it from Amritha Vahini Google group.

Recent Posts

See All
Sri Jagadguru Satya Chandrashekarendra Saraswathi Ashtakam

श्री-जगद्गुरु-सत्यचन्द्रशेखरेन्द्र-सरस्वत्यष्टकम् श्रीकामकोटिपीठस्य शोभां वर्धयितुं भुवि । अवतीर्णं गुरुं वन्दे सत्यश्रीचन्द्रशेखरम् ॥१॥ मोक्षपुरीति प्रथितायां महिमान्वितायां काञ्चीपुर्यां साक्षात् पर

 
 
 

Comments


bottom of page