top of page

Seer Bakshanam

பிராமண சமூகத்துத் திருமணங்கள் சம்ப்ரதாயங்களும், பல சுவாரஸ்யமான சடங்குகளும் நிறைந்தவை. பழைய நாட்களில் ஐந்து நாட்கள் நீடிக்கும் திருமணத்தை அக்ரஹாரமே மகிழ்ச்சியோடு கொண்டாடும். அப்பளம் இடுவது முதல் பாலிகை கரைப்பது வரை அக்ரஹாரத்தில் உள்ள அனைவரும் ஆர்வமாக பங்கு பெறுவார்கள். அக்ரஹாரத்து மகளிர் ஒரு இடத்தில் கூடி, பேசி, சிரித்து பல திருமண வேலைகளை செய்கையில் மன அழுத்தம் என்பதே கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. திருமணம் என்பதும் ஆயிரம் காலத்துப் பயிராக நீடித்தது.

திருமணக் கோலங்கள் போடுவதிலும், பட்சணங்கள் செய்வதிலும் தேர்ந்த பெண்மணிகள் அதை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுத்து மகிழ்ந்தார்கள். தலைமுறை இடைவெளியால் வரும் பிரச்சினைகள் கிடையாது.

முறுக்கு சுற்றும் இந்த கைவினைக் கலைஞர்களின் விரல்களிலிருந்து ஒரே சீராக வந்து விழும் மாவில் உருவாகும் திருகு சுருள்களாலான வட்ட வடிவமான முறுக்கு இவர்களின் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

சுவாமிமலையில் சமீபத்தில் நடந்த வள்ளி கல்யாணத்திற்காக குடந்தை நகரப் பெண்மணிகள் சிலர் சேர்ந்து திருமதி ஜெயம் வெங்கட்ராமன் அவர்கள் இல்லத்தில் சீர் பக்ஷணங்கள் செய்தது பழைய நாட்களின் அக்ரஹாரத்துக் கல்யாணத்தை நினைவூட்டுகிறது. இக்காணொளியில் திருமதி ராஜலக்ஷ்மியும், திருமதி ஜெயம் வெங்கட்ராமனும் சீர் பக்ஷணங்களின் செய்முறையை விளக்குகிறார்கள்.

Courtesy:Smt. Malathi Jayaraman,Kumbakonam.

Comments


bottom of page