top of page

கண்கண்ட தெய்வம் கதிரவன்

ரதஸப்தமி ஸ்நானம் (12.2.2012)

சூரியனின் ஒளியாலேயே உயிர்கள் வாழ்கின்றன என்பதால் சூரிய வழிபாடு, உலகளாவிய ஒன்றாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆறுவித சமய வழிபாட்டில் சூரியனை கடவுளாக வழிபடுவதற்கு ‘சவுரம்’ என்று பெயர். இந்தியாவில் சூரிய வழிபாடு ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு முறையில் செய்யப்பட்டு வருகிறது.

சூரியனை உலக முதல்வனாக ‘ஆதித்ய ஹிருதயம்’ நூல் கூறுகிறது. இது ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது. இதைத்தவிர மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் ஆகியவையும் சூரிய வழிபாட்டைப் பற்றி விவரிக்கின்றன. சூரியன் காலையில் ரிக் வேதமாகவும், நண்பகலில் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாம வேதமாகவும் திகழ்வதாக ‘சூரிய அஷ்டகம்’ சொல்கிறது.

காசியபர்- அதிதி தம்பதியருக்கு பிறந்த பன்னிரண்டு மக்களும் ‘பன்னிரு சூரியர்கள்’ எனப்பட்டனர். அதிதியின் பிள்ளைகள் என்பதால் ‘ஆதித்தியர்’ என்றும் அழைக்கப்பட்டனர். இந்த பன்னிருவர்களில் முதல்வனான விசுவான் தான், இப்போது உலகை பிரகாசிக்கச் செய்யும் சூரியன் என்று மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.

உலகெங்கும் சூரியனுக்கு பல ஆலயங்கள் இருந்தாலும், புராண காலத்தில் சூரிய பகவானுக்கு, காலவ முனிவரின் முயற்சியால் எழுப்பப்பட்ட ஆலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த ஆலயம் கும்பகோணம்-மயிலாடுதுறை மாற்று சாலையில் உள்ள சூரியநாராயணர் கோவில் ஆகும். சிறிய ஆலயம், நவக்கிரகங்களை மட்டுமே தெய்வங்களாகக் கொண்ட கோவில், சூரியனை மூலவராகக் கொண்ட திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது. தனது இரு தேவியருடன் சூரியன் நடுநாயகமாக வீற்றிருக்க, மற்ற எட்டு நவக்கிரகங்களும் எட்டு திசைகளில் இருந்து அருள்பாலிக்கிறார்கள்.

காலவ முனிவரை, ஒரு இளம் துறவி சந்தித்தார். அவரிடம் தன் எதிர்காலத்தைக் கேட்டறிந்தார். பின்னர் “அனைவரின் எதிர்காலத்தையும் சொல்லும் நீங்கள், உங்களின் எதிர்காலத்தை எப்போதாவது கணித்ததுண்டா?” என்று கேட்டார்.

திடுக்கிட்ட காலவ முனிவர், “நீ யார்?” என்று கேட்க, வந்தவர் “நான் காலதேவன்” என்று கூறி மறைந்தார். இதனால் தன்னுடைய எதிர்காலத்தை ஆராய்ந்தார் காலவ முனிவர். அதில் முன்வினைப் பயனால், அவருக்கு தொழுநோய் வரும் என்பது தெரிந்தது.

இதையடுத்து முன்வினைப்பயனை தருகின்ற நவக்கிரகங்களை காலவ முனிவர் சரணடைந்தார். விந்தியமலையில் பஞ்சாக்னி வளர்த்து, நவக்கிரகங்களை நோக்கி தவம் செய்தார். நவக்கிரகங்களும் அவரின் முன்பாக தோன்றின. காலவ முனிவர் கேட்ட, தொழுநோய் பீடிக்காத வரத்தையும் அளித்தனர்.

இதையறிந்த பிம்மன், நவக்கிரகங்களை வரவழைத்தார். “சிவபெருமானின் ஆணைப்படியும், காலதேவனின் துணை கொண்டும், அனைத்து ஜீவராசிகளுக்கும், அவரவர் செய்த வினைகளின் பயனை அளிக்கவே நீங்கள் என்னால் படைக்கப்பட்டீர்கள். உங்களுக்கு தனித்து இயங்கும் சுதந்திரம் இல்லை. அப்படியிருக்கையில் காலவ முனிவருக்கு நீங்கள் வரம் அருளியது தவறு. எனவே நீங்கள் அனைவரும் பூலோகத்தில் பிறந்து, காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்படவேண்டிய கால அளவு வரை, அதே நோயால் துன்பப்படுவீர்கள்” என்று கூறினார்.

அதைக் கேட்டு வருந்திய நவக்கிரகங்களும் பிரம்மனை பணிந்து, விமோசனம் அருள வேண்டி நின்றன. உடனே பிரம்மன், “காவிரி ஆற்றின் வடகரையில் உள்ள அர்க்க(எருக்கு)வனமான திருமங்கலக்குடி சென்று, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைத் தொடங்கி பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை வரை, 78 நாட்கள் தவம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் உதயத்துக்கு முன் எழுந்து, காவிரியில் நீராடி பிராணநாதரையும் மங்கலநாயகியையும் வழிபட வேண்டும். அன்றைய தினம் ஏழு நாழிகைக்குள் ஒரு எருக்கு இலையை எடுத்து, அதில் பிடி அளவு தயிர் அன்னம் வைத்து உண்ண வேண்டும். மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்” என்றார்.

பிரம்மதேவன் சொன்னபடி, அகத்தியரின் வழிகாட்டு தலில், நவக்கிரகங்கள், இறைவன்- இறைவியோடு, விநாயகர் சிலை ஒன்றையும் நிறுவி அந்த வழிபாட்டைச் செய்தனர். 78 நாட்கள் முடிவில் சிவபெருமான் அவர்கள் முன்பாக தோன்றி, “இன்றோடு உங்களின் நோய் முழுவதுமாக குணமடையும். நீங்கள் தவம் இருந்த இடத்தில் உங்களுக்கு தனி ஆலயம் உருவாகும். அங்கு வந்து உங்களை வழிபடுபவர்களுக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்யும் வரத்தை தந்தோம்” என்று அருளினார்.

நவக்கிரகங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர், ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ‘கோள்வினை தீர்த்த விநாயகர்’ என்ற பெயரில் அருள்கிறார். தென்னகத்திலேயே சூரியனுக்கென்று தனிக் கோவில் அமைந்த தலம் இது. கருவறை உள்ளே உஷாதேவி மற்றும் சாயாதேவியுடன் சிவசூரிய பெருமானாக நின்ற கோலத்தில் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். அங்கிருந்தே குரு பகவானையும தரிசிக்கும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. தவிர தென்மேற்கில் சனீஸ்வரன், தெற்கில் புதன், தென்கிழக்கில் அங்காரகன், கிழக்கில் சந்திரன், வடகிழக்கில் கேது, வடக்கில் சுக்ரன், வடமேற்கில் ராகு எழுந்தருளியுள்ளனர்.

திருவாவடுதுறை ஆதினத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ்வாலயம், தினமும் காலை 6 மணியில் இருந்து பகல் 1மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்:

தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் மாற்று மார்க்க சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் செல்வோர் ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் வடக்கில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

ரதஸப்தமி ஸ்நானம்

சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி. அவரது பிறந்தநாளை ரத சப்தமியாக கொண்டாடுகின்றனர். சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மறுபெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை கழிந்து, பவுர்ணமி கழிந்த 7-ம் நாளை ‘சப்தமி திதி’ என்கிறோம்.

உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் 7-வது நாள் வரும் சப்தமி திதியே ரத சப்தமி ஆகும். ரத சப்தமிஅன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகிறது. அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. அன்று சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட செல்வது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நீராடலாம். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தை கள் உள்பட அனைவரும் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

ஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள், தலையில் வைத்து நீராட வேண்டும். பெண்கள் உயர் நிலையை அடைவர்.

கணவரை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

அன்று சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை இரண்டையும் நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி ரொட்டி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனை தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெள்ளம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.

ஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

வந்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம் யத்யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸீ ஜன்மஸீ தன்மே ரோகம் ச மாகரீ ஜந்து ஸப்தமீ நௌமி ஸப்தமீ தேவி!த்வாம் ஸப்த லோகைகமாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன ம்ம் பாபம் வ்யபோஹய!

Source: Dailythanthi

87 views0 comments
bottom of page