top of page

Sri Sathya Chandrashekarendra Saraswathi Swamigal - Sanyasa Sweekara Vaibhavam.


விஸ்வாவசு ஆண்டு அக்‌ஷய திருதியை நன்நாளாம் இன்று 30-4-25, காஞ்சிபுரத்தில் உள்ள இந்திரவிழாபோல் கோலாகலமாக நடைபெற்ற விழாவில், ஶ்ரீ ஆதிசங்கர பரம்பராகத மூலாம்னாய

சர்வஞ ஶ்ரீ காமகோடி பீடம் சமஸ்தானத்தின் 70 ஆவது பீடாதிபதிகள்

ஜகத்குரு பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பீடத்தின் அடுத்த வாரிசாக, 71வது பீடாதிபதியாக ஆந்திர மாநிலம் அன்னவரம் ஊரை சேர்ந்த ஶ்ரீ சுப்பிரமணிய கணேஷ் சர்மா திராவிட் எனும் ப்ரும்மச்சாரி இளைஞருக்கு முறைப்படி சிஷ்ய-சன்யாசாஸ்ரமம் வழங்கி அவருக்கு உபதேசம் செய்வித்து தண்டம், கமண்டலு, காவி வஸ்திரம் முதலியனவும் தீக்‌ஷா நாமும் வழங்கினார்கள். ஶ்ரீ காமகோடி பீடத்திற்கு உரித்தான “ இந்தர சரஸ்வதி” எனும் பதத்தையும் சேர்த்து “ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி” எனும் தீக்‌ஷா நாமத்தினை அளித்தார்கள். விசேஷமான இந்த தீக்‌ஷா நாமத்தின் பொருளையும் பெருமையையும் அறிவோமா?.

மோக்‌ஷபுரியான காஞ்சிபுரத்தின் இன்னொரு பெயர் சத்யவ்ரத க்‌ஷேத்திரம்.


மிகப்ரசித்தமான சத்தியநாராயண ஸ்வாமி கோவில் அமைந்துள்ன அன்னவரம், ஶ்ரீ இளைய பெரிவாளின் சொந்த ஊர். புண்ணிய பூமியாம், பாரத தேசத்தின், மஹாவாக்கியம், “சத்தியமேவ ஜயதே” இந்த மூன்று வாக்கியங்களிலிருந்தும் “சத்ய” எனும் பதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

1983ம் ஆண்டில், ஶ்ரீ பரமாச்சார்யாள் கர்நூல் முகாமில் இருந்த போது பூஜ்யஶ்ரீ பெரியவாளுக்கு காஞ்சியில், சன்யாஸாஸ்ரம ஸ்வீகரணம், பூஜ்யஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி அவர்களால் செய்து வைக்கப்பட்டது. ஶ்ரீ பரமாச்சார்யாள் பாலபெரியவாளுக்கு, அவரது குரு, ஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி எனும் நாமத்தின் விசேஷங்களை மேலும் சிறக்கச் செய்வதேபோல், குருவின் பெயருக்கு முன்னால் “வி “ எனும் வார்த்தை சேர்த்து “சங்கர விஜயேந்திர சரஸ்வதி” என்ற தீக்‌ஷா நாமத்தினை அளித்தார்கள். தனக்கு தீக்‌ஷா நாமம் தந்த பரமகுருவுக்கு தம் க்ருதஞையை தெரிவித்துக் கொள்ளும் வகையில் அவர்களது பெயரிலிருந்து, “ சந்திரசேகர” என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு, “ஶ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி” என்ற தீக்‌ஷா நாமத்தை நமது இளைய பெரியவாளான 71வது பீடாதிபதிக்கு அளித்தார்கள். இளையபெரிவாளின் தீக்‌ஷாநாம விவரம் ஶ்ரீ பெரியவா சொன்னபோது தெரிய வந்தது. பெரியவா எந்த ஒரு சொல்லையும் பொருள் உணர்ந்து சொல்லுவார்கள், எச்செயலையும் காரண காரியத்துடன் செய்வார்கள் என உணர்ந்து கொள்வோமாக.


முதல் சுப நிமித்தம்:

சன்யாஸ ஸ்வீகரணம் என்பது சர்வ பரி தியாகம் என்பதும் சன்யாஸிக்கு இது மறு பிறவி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. நமது ஶ்ரீ பெரியவா, பீடத்தின் அடுத்த வாரிசான ஶ்ரீ சத்ய சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமி அவர்களுக்கு தீக்‌ஷை வழங்க அக்‌ஷய திரிதியை அன்று காலை ஶ்ரீமடத்திலிருந்து காமாட்சி கோவிலுக்கு புறப்படும் முன் அனுக்ஞை விநாயகரை நமஸ்கரித்துவிட்டு தமது குருவும் பரமகுருவும் அதிஷ்டான சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிருந்தாவனம் சென்று ஶ்ரீமஹா பெரியவாளிடமும் ஶ்ரீ புதுபெரியவாளிடமும் வந்தனம் தெரிவிக்கும் போது, அதிஷ்டானத்தின் ப்ராகாரத்தில் காற்று வீச எந்த சாதனமும் இல்லாத இடத்தில் அங்கு மாடத்தில் நன்கு படர்ந்து உயர்ந்து நிற்கும் துளசியானது, “யானை அசைவதே போல்”, “மயில் பீலியை “ அலை போல் அசைத்து காற்று எழுப்புவது போல், தன்னை நன்கு அசைத்தது. புனிதமான துளசிச் செடியின் இச்செயல், ஶ்ரீ இளைய பெரியவாளின் தேர்வுக்கு அங்கீகாரம் அளித்தது போலும் இன்னும் சற்றுநேரத்தில் நடைபெற உள்ள தீக்‌ஷை வழங்கும் நிகழ்சிக்கு, குருவும் பரமகுருவும் தமது அனுக்ரஹத்தை வழங்குவது போலும் இருந்தது. இந் நிகழ்சி ஶ்ரீ பெரியவாளுடன் இருந்து பார்த்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தந்தது.

பூஜ்யஶ்ரீ பெரியவாளுக்கு சாஷடாங்க நமஸ்காரம்


மேலும் ஒரு சுப நிமித்தம்:

ஶ்ரீ சத்ய சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் சன்யாஸ தீக்‌ஷை ஏற்று, ஶ்ரீ காமகோடி பீடத்தின் ஆதிசங்கரர் முதலாக மகத்தான குருவரர்களின் வரிசையில் 71 வது பீடாதிபதியாக ஆன அதே முகூர்த்தத்தில் ஶ்ரீ ஸ்வாமிகளின் பிறந்த ஊரான அன்னவரத்தில் மழை பெய்வதற்கான முன் அறிகுறிகள் ஏதுமில்லாதபோது மழை கொட்டி ஊரின் கோடை வெப்பத்தை வெகுவாகக் குறைத்தது. இந்த சுப நிமித்தமானது, தேசம் முழுதும் சனாதந தர்மம் எனும் தெய்வீகக் கொடியினை இன்னும் மேலே தொடர்ந்து உயர்த்தி பிடித்தி கலி புருஷனின் தகிப்பையும் தாக்கத்தையும் குறைத்திட அன்னவரம் சத்தியநாராயண ஸ்வாமியின் அனுக்ரஹத்தோடு அன்னவரம் ஊரில் பிறந்த நம் காமகோடி பீட வாரிசான புதிய ஸ்வாமிகள் சன்யாச தீக்‌ஷை ஏற்றுள்ளார் என அனைவருக்கும் தெரிவிப்பதாக அமைந்தது.

பூஜ்ஶ்ரீ பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்


பூஜ்யஶ்ரீ பெரியவாள் மிகுந்த பணிச்சுமைக்கு இடையிலும், அவர்களது உரையில் தமக்கே உரித்தான பேச்சின் ஊடே தெரிவிக்கும் நகைச்சுவை, மெலிதான ஆனால் சற்றும் வருத்தம்தராத கிண்டல் கேலி முதலியன இருக்கும். மேலும் தமிழாகட்டும் ஆங்கிலமாகட்டும் சம்ஸகிருதமாகட்டும் அனாயாசமாக அர்த்தமுள்ள அடுக்கு மொழிகள் அடுத்தடுத்து வந்து விழும். ஶ்ரீ ஸ்வாமிகளின் அத்தகைய உரையாடல், பேசிக் கொண்டிருப்போரையும் கேட்டுக்கொண்டுருப்போரையும் உத்சாகப் படுத்தி இந்த சத்சங்கத்தில் இன்னும் சற்று நேரம் இருக்க மாட்டோமா என ஏங்கவும் வைக்கும். நேற்று ஒரு சந்தர்ப்பத்தில், கும்பகோணம் ஶ்ரீ ரமண தீக்‌ஷதரிடம், “ஏதோ காரணங்களால், வைதீகர்களும் லெளகீகர்களும் நேற்றைய மகத்தான நிகழ்சிக்கு வர முடியாது போயிருக்கலாம். அவர்கள் 2-5-25 அன்று ஶ்ரீமடத்தில் விசேஷமாக நடைபெறுகிற ஶ்ரீ சங்கரஜயந்திக்கு அவர்களை எதிர்பாரக்கிறோம்” என்றார். மேலும் ஶ்ரீ பெரியவா, “ நாம் அவர்கள் அனைவரிடமும் எதிர்பார்ப்பது, Attendance, Attitude and Activities என்றார்கள். ஶ்ரீ பெரியவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை இதைவிட ஆங்கிலத்தில் அழகாக, ரத்தின சுருக்கமாக யாராலும் தெரிவிக்க இயலாது. பூஜயஶ்ரீ பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.


Source courtesy: Moderator, Sri Sethu.Ramachandran, Retd.IAS

Comments


bottom of page